மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் பலி - மற்றொரு விபத்தில் தாய்-மகன் சாவு

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் பலியானார்கள். மற்றொரு விபத்தில் தாய்-மகன் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் பலி - மற்றொரு விபத்தில் தாய்-மகன் சாவு
Published on

சென்னையை அடுத்த தாம்பரத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 31). இவருடைய நண்பர் டேவிட் (30). இவர், விழுப்புரத்தை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலையில் பட்டுநூல் சத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி, இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பார்த்திபன், டேவிட் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்தை கண்டதும், லாரியை அங்கேயே விட்டுவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

அதேபோல் மீஞ்சூர அடுத்த வல்லூர் ராஜீவ் காந்தி நகரில் வசித்து வருபவர் வாசுதேவன் (49). இவர், சென்னை மாநகராட்சியில் மின்துறை ஆய்வாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நிர்மலா (49). இவர், தனது மகன் நவீன்குமார் (29) என்பவருடன் மீஞ்சூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது பின்னால் வந்த லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நிர்மலா, நவீன்குமார் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com