

மதுக்கூர்:
மதுக்கூர் அருகே நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 184 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
மக்கள் நேர்காணல் முகாம்
மதுக்கூர் அருகே சொக்கனாவூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார், அண்ணாதுரை எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் பெரியகோட்டை சரகத்திற்கு உட்பட்ட சொக்கனாவூர், புளியக்குடி கிராமங்களை சேர்ந்த மக்கள் ரேஷன் கார்டு, பட்டா மாறுதல், கல்வி கடன், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 125 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.
நலத்திட்ட உதவிகள்
அதனை தொடர்ந்து வருவாய்த்துறை மூலம் விலையில்லா வீட்டு மனைபட்டா 110 நபர்களுக்கும், 10 நபர்களுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையும், சமூக பாதுகாப்பு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், விதவைகள், ஈமச்சடங்கு உதவித்தொகைகள் 49 நபர்களுக்கும், வேளாண் துறை மூலம் 10 நபர்களுக்கு இடுப்பொருட்களும், தோட்டக்கலை துறை மூலம் 5 நபர்களுக்கு மரக்கன்று, பழக்கன்று, தொகுப்புகள், முள் இல்லா மூங்கில் உள்ளிட்டவைகளும் என மொத்தம் 184 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்து 78 ஆயிரத்து 290 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இதில் உதவி கலெக்டர்(பொறுப்பு) வாசுதேவன், தாசில்தார் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜு, தி.மு.க ஒன்றிய செயலாளர்கள்இளங்கோ, கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் ரூஸ்வெல்ட் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா பழனிவேல் நன்றி கூறினார்.