தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு பணியிடங்களில் 20 சதவீதம் முன்னுரிமை: வழிகாட்டு நெறிமுறைகள் அரசு வெளியீடு

தமிழ் இலக்கியத்தில் கல்வித் தகுதி பெற்றவர்களை மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் பாடத்துக்கான ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு பணியிடங்களில் 20 சதவீதம் முன்னுரிமை: வழிகாட்டு நெறிமுறைகள் அரசு வெளியீடு
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு பணிநியமனங்களில் நேரடி நியமனத்துக்கான காலிப் பணியிடங்களில் 20 சதவீதம் பணியிடங்களை தமிழ் வழிக் கல்வி படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வது குறித்து வெளியிடப்பட்ட அரசாணை எண்.82, பத்தி 4-ல் குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பதிலாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் மாற்றி அமைத்து அரசு ஆணையிட்டு உள்ளது. அதில் குறிப்பிட்ட சில வழிகாட்டு நெறிமுறைகள் விவரம் வருமாறு:-

இதர மொழிகளை பயிற்று மொழியாக படித்து, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள் இந்த முன்னுரிமை ஒதுக்கீட்டுக்கு தகுதியுடையவர்கள் இல்லை. பள்ளிக்கு செல்லாமல், நேரடியாக தனித்தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் முன்னுரிமை வழங்கப்பட தகுதியுடையவர்கள் அல்லர்.

கல்வித் தகுதி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் மூலம் தமிழ் வழியில் படித்தவர்கள் என்பதை சம்பந்தப்பட்ட பணியாளர் தேர்வு முகமைகள், பணி நியமன அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். தமிழ் இலக்கியத்தில் கல்வித் தகுதி பெற்றவர்களை மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் பாடத்துக்கான ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். தமிழ் பாடத்திலும் மாறுபட்ட வேறு ஒரு பாடத்திலும் பட்டம் பெற்றவர்களை தமிழ் ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யக் கூடாது என்பதற்கான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகள் நடவடிக்கை மேற்கொள்ளும்.

இந்த 20 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடானது நேரடி பணி நியமனத்துக்கான ஒவ்வொரு தேர்வு நிலையிலும் (முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு) பதவி வாரியாக பின்பற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 வகையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com