20 வால்வோ ஏ.சி. பேருந்து சேவை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

20 வால்வோ ஏ.சி. பேருந்து சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை,
அரசு பேருந்துகளை தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக தரம் உயர்த்தும் நடவடிக்கையாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் 2025-2026 நிதியாண்டுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 130 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்துள்ளது. இவற்றில் 110 பேருந்துகள் குளிர்சாதன வசதியில்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்டவை.
மீதமுள்ள 20 பேருந்துகள் குளிர்சாதன இருக்கை வசதி கொண்ட வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள். பெங்களூரில் இந்தப் பேருந்துகளை கட்டமைக்கும் பணிகள் முடிவுற்ற நிலையில் 20 அதிநவீன சொகுசு பேருந்துகள் அரசு விரைவு போக்குவரத்துக் கழக சென்னை பணிமனைக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு Multi Axle கொண்ட 20 அதி நவீன வால்வோ குளிர்சாதன சொகுசுப் பேருந்துகளின் இயக்கத்தை சென்னை தீவுத்திடலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை, பெங்களூரு, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், நாகர்கோவில், திருச்செந்தூர், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இந்த வால்வோ ஏ.சி. பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
நீல நிறத்திலான இந்த வால்வோ மல்டி ஆக்சில் பேருந்தின் நீளம் 15 மீட்டர். ரூ.1.75 கோடியில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள இந்தப் பேருந்தின் முன், பின்பகுதிகளில் எண்ம வழித்தட பலகை உள்ளது. 2×2 சீட்டிங் அமைப்புடன் 51 இருக்கைகள் உள்ளன.
பெரிய அளவிலான ஜன்னல்கள், சார்ஜிங் வசதி, பாதுகாப்பு அமைப்பு, கேமராக்கள், சென்சார் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. செமி ஸ்லீப்பர் வகையில் முழங்கால்கள் வரை வைக்கும் விதமாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தீ விபத்து ஏற்பட்டால், பயணிகளைப் பாதுகாக்கும் விதமாக, பேருந்தின் உள்ளேயே தண்ணீர் தெளிப்பான்களுக்கான குழாய்களும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன.






