

பிரம்மதேசம்
பிரம்மதேசத்தை அடுத்த வடநெற்குணம் கிராமத்தில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அதே கிராமத்தை சேர்ந்த உஷா, விஜயா, கவுரி, வள்ளியம்மாள், ஆனந்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மணிலா விதைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகே உள்ள மரத்திலிருந்து திடீரென கிளம்பிய தேனீக்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண்களை துரத்தி, துரத்தி கொட்டின. இதனால் அவர்கள் வலி தாங்க முடியாமல் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர். இதில் சிலர் மயங்கி விழுந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சைபெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.