200 தொகுதிகள் நிச்சயம்.. 200க்கு மேல் லட்சியம்: கோவை மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தேர்தலில் நாம் 2 கோடியே 50 லட்சம் வாக்குகளுக்கு குறையாமல் வாங்க வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
200 தொகுதிகள் நிச்சயம்.. 200க்கு மேல் லட்சியம்: கோவை மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு
Published on

கோவை,

கோவையில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பெயரில் வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது;

“பாசக்கார மேற்குமண்டலத்தில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. செந்தில் பாலாஜியின் ஆற்றல், எதிரிகளின் தூக்கத்தை கெடுக்கிறது. எதிரிகளின் சிம்மசொப்பனை செந்தில் பாலாஜி. அண்ணா, கருணாநிதி ஆகியோரின் அரசியலில் முக்கிய பங்காற்றிய ஊர் கோவை. உங்களை பார்த்து நானும் உற்சாகமடைகிறேன்.

கடந்த தேர்தலில் இங்கு நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்த முறை வெற்றியை உறுதிப்படுத்துங்கள். பல்வேறு சிக்கல்களை கடந்து, அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். உலக தரத்தில் கிரிக்கெட் மைதானம் கட்டப்பட உள்ளது. ஏராளமான திட்டங்கள் மேற்கு மண்டலத்துக்கு வர உள்ளது. வரும் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்.

இந்த தேர்தலில் நாம் 2 கோடியே 50 லட்சம் வாக்குகளுக்கு குறையாமல் வாங்க வேண்டும்.ஒரு பூத்துக்கு 350 வாக்குகள் வாங்க வேண்டும். 200 தொகுதிகள் நிச்சயம். 200 பிளஸ் லட்சியம். பல சமூக ஊடகங்கள் இருந்தாலும், ஒருவரின் வீட்டிற்கு நேரில் சென்று வாக்கு கேட்பது என்பது மிகவும் முக்கியம். நமது சாதனைகளை கூறி வாக்கு கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். வாக்காளர்கள் வாக்களிக்கும் வரை நமக்கு ஓய்வு என்பதே இருக்கக்கூடாது. வீடு, வீடாக சென்று பணிவாக, கனிவாக, நட்பாக, அன்பாக வாக்கு கேட்க வேண்டும். 75 ஆண்டுகளாக திமுக வலிமையாக இருப்பதற்கு இதுதான் காரணம்.

திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம். மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் திட்டம், புதுமைப்பெண், நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம், நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

உங்களிடம் ஒரு புத்தகங்கள் கொடுக்கப்படும். அதில் நமது சாதனைகள் அடங்கிய பட்டியல் உள்ளது. அதனை நீங்கள் படிக்க வேண்டும். இதை நீங்கள் ஒவ்வொரு வீட்டிலும் சென்று சொல்ல வேண்டும். அப்போதுதான் மக்களின் நம்பிக்கை வாக்குகளாக மாறும். நம்பிக்கையோடு பிரசாரம் செய்யுங்கள்.

வளர்ச்சியை பிடிக்காத கட்சியாக பாஜக உள்ளது. எனவே கிளைக்கழகமாக அதிமுகவை கொண்டு முன்னேற பாஜக நினைக்கிறது. ஜெயலலிதா மீது திடீரென மோடிக்கு பாசம் வந்துள்ளது. ஜெயலலிதா புகழ் பாடினால் வாக்குகள் வருமா என எண்ணுகின்றனர். உங்களின் நடிப்பை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.

கோவை, மதுரைக்கு மெட்ரோவுக்கு பிரதமர் மோடி ஏன் அதுமதி தரவில்லை. தேர்தல் நேரத்தில் கூட தமிழகத்துக்கு நிதி தரவில்லை. தமிழ்நாட்டின் கோரிக்கைகளை நிறைவேற்றாதது ஏன்.? எப்போதெல்லாம் தனக்கு பிரச்சினை வருகிறதோ, அப்போதெல்லாம் டெல்லிக்கு சென்று எடப்பாடி பழனிசாமி சரணடைகிறார். தேர்தல் கால கூட்டணிக்கு ஆயுள் குறைவு. திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. களத்தில் உழைப்போம். வெல்வோம் ஒன்றாக."

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com