

மதுரை,
மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உலகளாவிய போர்ப்பதற்றங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு சிக்கல்கள், உரங்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், இந்தியா உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக திகழ்கிறது.
நமது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு சர்வதேச அளவில் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது. இந்தியாவில் யு.பி.ஐ. தளம் மூலம் ஒவ்வொரு மாதமும் 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை கையாள்கிறது.
இந்தியாவில் தற்போது 2,100 உலகளாவிய திறன் மையங்கள் உள்ளன. இவை பெரு நகரங்களை தாண்டி 2-ம் மற்றும் 3-ம் கட்ட நகரங்களுக்கும் விரிவடைந்து வருகின்றன.
நாட்டில் பின்தங்கிய 114 மாவட்டங்களை கண்டறிந்து, அவற்றை ‘லட்சிய மாவட்டங்கள்' என்று அழைத்து, அனைத்து அரசுத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து மேம்படுத்தி வருகிறோம். அதன்படி, தமிழகத்தில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்கள் இதில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு முன்னிலையில் உள்ளன.
உள்ளூர் தயாரிப்புகளின் உலகளாவிய சந்தை சிட்பி (எஸ்.ஐ.டி.பி.ஐ.) வங்கி விருதுநகரில் ஒரு பிரிவை தொடங்கி, அங்குள்ள புகழ்பெற்ற 'விருதுநகர் வத்தல்' (மிளகாய்) வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இப்பகுதி விவசாயிகள் மாப்பிள்ளை சம்பா, கருப்புக்கவுனி போன்ற பாரம்பரிய, ஊட்டச்சத்துமிக்க நெல் ரகங்களை மீட்டெடுத்து சர்வதேச அளவிற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கி உள்ளனர்.
பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மதுரை, எப்போதும் அழியாத மீளெழுச்சியின் அடையாளமாக உள்ளது. பல்வேறு சாதனைகள் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் சாதனைகள் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக நிமிர்ந்து நிற்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.