

கோவை,
வெள்ளலூர் அகழாய்வு பணியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்படுகின்றன.
கோவையில் உள்ள மிக பழமையான ஊர்களில் முக்கியமானதாக வெள்ளலூர் உள்ளது. இங்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்து உள்ளனர். மேலும் ரோமானியர்களுடன் வணிக தொடர்பு வைத்திருந்தனர். இந்த பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 7 குழிகள் தோண்டப்பட்டன. இந்த குழிகளில் இதுவரை சுடுமண் அணிகலன்கள், சங்கு வளையல்கள், மண்பானைகள், பானை ஓடுகள் என 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்து உள்ளன. ஒரு சில பழமையான நாணயங்களும் கிடைத்து உள்ளன. இந்த நாணயங்கள் ரோமானியர்களுடன் தொடர்புடையதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வெள்ளலூரில் கிடைத்த 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பொருட்களை பொதுமக்கள் பார்வையிட வசதியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதே இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. இதுகுறித்து தொல்லியல் அலுவலர்கள் கூறியதாவது:-பண்டைய தமிழகத்தின் பெருவழிப்பாதையாக வெள்ளலூர், பேரூர் விளங்கியது. இந்த வழியாக சேர நாடு மூலம் வணிகர்கள் ரோமானியர்களுடன் தொடர்பு ஏற்படுத்தினர். இதனால் கோவையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற அகழாய்வு பணியின்போது ரோமானிய காலத்துடன் தொடர்புடைய நாணயங்கள் கிடைத்தன. வெள்ளலூர் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் பொதுமக்கள் வசித்திருக்கலாம் என தெரிகிறது. இங்கு 7 குழிகள் தோண்டி அகழாய்வு நடக்கிறது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் இன்று பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. இதனை காலை 10 மணி முதல் மாலை வரை பொதுமக்கள் பார்வயிடலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.