

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் அருகே ஆப்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள ஆண்டியேந்தல் பகுதியில் அமைந்திருக்கும் அரியநாச்சி அம்மன் திருக்கோயில் வளாகத்தில் புதையுண்டு கிடந்த கல் ஒன்றை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு திருப்பணியின் போது மீட்டெடுத்தனர். இதை ஆசிரியர் முனியசாமி கண்டுபிடித்துள்ளார்.
இந்த கல்வெட்டினைப் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளரும், தொல்லியல் அறிஞருமான சாந்தலிங்கமும், அவரது உதவி ஆய்வாளர் உதயகுமாரும் நேரில் பார்வையிட்டனர். அந்த கல்வெட்டில் உள்ள செய்தியை படித்தனர். அதன் மூலம் "ஆபன்னூர் ஏறி மாண்டு விழுந்த அத்தியன் கீரன் கல்" என்ற வரலாற்றுத் தகவல் கிடைத்துள்ளது.
பாண்டிய மண்டலத்தின் மையப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ள பொ.யு.மு. முதலாம் நூற்றாண்டினைச் சார்ந்ததாகக் கருதப்படும் இந்த நடுகல் கல்வெட்டு, தமிழர்களின் 2 ஆயிரம் ஆண்டு கால எழுத்து மரபை மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.