

சென்னை
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்றி செயல்படுத்த முடியாத திட்டங்களை கூறி திமுக வெற்றி பெற்றதாக கூறினார்.
சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை மானியகோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது பேசிய திமுக கொறடா சக்கரபாணி நூறு நாட்கள் வேலை திட்டத்தில் மக்களுக்கு உரிய முறையில் ஊதியம் வழங்கப்படவில்லை என கூறினார். மத்திய அரசு தான் ஊதியத்தை பயனாளிகளுக்கு வழங்கி வருவதாகவும் மாநில அரசுக்கு சம்பந்தம் இல்லை என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
முதல் அமைச்சர் பழனிசாமி பேசும் போது
உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறும் திமுக விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களில் வைக்கப்பட்ட 5 சவரன் நகை கடன்களை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட மாநில அரசு செய்யக்கூடிய பல திட்டங்களை எப்படி அறிவித்தீர்கள் என்றும், ஆட்சியில் இல்லாதபோது எப்படி திட்டங்களை செயல்படுத்த முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்
இதை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதல்வர் இதே கருத்துக்களை தொடர்ந்து அவையில் பேசி வருவதாகவும், வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமரும் என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, 2021 தேர்தலில் யாரை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று, தெரிவித்தார்.