2025-ல் அரசு பணிக்கு 20,471 பேர் தேர்வு - டி.என்.பி.எஸ்.சி. பெருமிதம்

தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்தி கொள்வதற்காக 2026-ம் ஆண்டுக்கான ஆண்டுத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வுப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 2025-ம் ஆண்டு 20 ஆயிரத்து 471 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 9 ஆயிரத்து 770 தேர்வர்கள் கூடுதலாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க 11 ஆயிரத்து 809 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அரசுப்பணிகளின் நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 2025-ம் ஆண்டு 1,007 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான 761 குறைவு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு தேர்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக 2025-ம் ஆண்டு கலந்தாய்வின் போது காலிப்பணியிடங்களின் விவரங்களை தேர்வர்கள் இணையவழியில் அறிந்துகொள்ளும் வகையில் தேர்வாணையத்தின்' யூடியூப்' சேனல் மூலமாக நேரலையாக ஒளிபரப்பும் நடைமுறையும். கணினிவழி மூலம் நடைபெறும் தேர்வுகளில் தேர்வர்கள் தங்களது விடைத்தாளை உத்தேச விடைகள் வெளியிடும்போது தேர்வாணைய இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
தேர்வு நடைமுறைகளில் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் விதமாக 2025-ம் ஆண்டு அரசுத் துறைகளிடமிருந்து காலிப்பணியிட விவரங்களை இணையவழியில் பெறும் நடைமுறையும், தேர்வர்கள் தேர்வுக்கட்டணங்களை யு.பி.ஐ. மூலம் செலுத்தும் வசதியும், தேர்வர்கள் தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் வசதியும் இணையவழியில் மனுக்களை சமர்ப்பிக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்தி கொள்வதற்காக 2026-ம் ஆண்டுக்கான ஆண்டுத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வாணைய வரலாற்றில் முதன்முறையாக தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி 1, 2, 2ஏ, மற்றும் 4 ஆகிய பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு, நேர்முகத்தேர்வு பதவிகள், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள், பட்டயப்படிப்பு/ தொழிற்பயிற்சி நிலை ஆகியவைகளுக்கான அறிவிப்புகள் தேர்வாணையத்தால் வெளியிடப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






