

சென்னை,
சென்னையில் உள்ள டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில் நடைபெற்ற 20-வது ரோஜ்கார் மேளா நிகழ்வில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு, இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்ற 20-வது ரோஜ்கார் மேளா நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று, 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கி, புதிதாக அரசுப் பணியில் இணையவுள்ள இளைஞர்களிடம் உரையாற்றினார்.
சென்னையில் உள்ள டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில் நடைபெற்ற 20-வது ரோஜ்கார் மேளா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினேன்.
இந்நிகழ்வில் பணி நியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்ட இளைஞர்கள், வருமான வரித் துறை, ESIC, இந்திய விமான நிலையங்கள் ஆணையம், பாதுகாப்புத் துறை, அஞ்சல் துறை, ஜிப்மர் (JIPMER), தெற்கு ரயில்வே உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் தங்களது பணியைத் தொடங்க உள்ளனர்.
புதிய பொறுப்புடன் அரசுப் பணியில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். தங்களது அறிவு, திறமை மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கிட வாழ்த்துகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.