

திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 21 பவுன் நகை திருட்டுபோனது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்க நகைகள்
கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவருடைய மனைவி சகன் பீவி(வயது 54). இவர் மேட்டுப்பாளையத்தை அடுத்த ஓடந்துறை பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் கோவையில் இருந்து ரெயில் மூலம் மேட்டுப்பாளையத்திற்கு சென்றார்.
முன்னதாக அவர் கரும்புக்கடையில் இருந்து பஸ்சில் கோவை ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது 21 பவுன் தங்க நகைகளை ஒரு பையில் வைத்திருந்தார்.
விசாரணை
ஓடந்துறைக்கு சென்றதும், அந்த பையை அவர் திறந்து பார்த்தார். அப்போது அதில் வைத்திருந்த 21 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சகன் பீவி, உடனடியாக கோவைக்கு திரும்பியதோடு உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சகன் பீவி பஸ்சில் பயணித்தபோது மர்ம நபர்கள் நகையை திருடி சென்றிருக்கலாம் என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.