

நாகை,
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டையை சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 12 மீனவர்களும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி மேட்டை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஒன்பது மீனவர்களும், கடந்த 29ந்தேதி கடலுக்கு சென்றனர்.
இந்நிலையில், கோடியக்கரைக்கு தென்கிழக்கில் மீன் பிடித்தபோது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக, இரண்டு விசைப்படகில் இருந்த 21 மீனவர்களையும் கைது செய்து, படகுகளை இலங்கைக்கு இழுத்து சென்றனர்.
இலங்கை, மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட மீனவர்கள், விசாரணைக்கு பின் ஊர்க்காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஏற்கனவே, இலங்கையால் விடுவிக்கப்பட்ட 56 மீனவர்களும் இதுவரை தமிழகம் திரும்பாத நிலையில், தற்போது 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.