எடப்பாடி பழனிசாமி உள்பட 22 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: சி விஜயபாஸ்கர்

எடப்பாடி பழனிசாமி உள்பட 22 எம்.எல்.ஏக்கள் கொறடா உத்தரவை மீறியுள்ளதாக சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி உள்பட 22 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்:  சி விஜயபாஸ்கர்
Published on

சென்னை,

சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததன் எதிரொலியாக அதிமுகவில் உள்கட்சி மோதல் மீண்டும் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு தரப்பும்,சிவி சண்முகம் -எஸ்.பி வேலுமணி தலைமையில் ஒரு தரப்பினரும் இயங்கி வருகிறார்கள். சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக வேலுமணி தரப்பை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். அதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த 22 பேர் தவெக அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்பட 22 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சபாநாயகரை சந்தித்து எஸ்பி மேலுமணி தரப்பினர் மனு அளித்தனர். பின்னர் சி விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

எஸ்.பி. வேலுமணி தலைமையில் பெரும்பான்மையான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி சட்டமன்றக் குழு தலைவராகவும், என்னை கொறடாவாகவும் எம்.எல்.ஏ.க்கள் ஏற்றுக்கொண்டு நியமனம் செய்தனர். நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று உரிய விதிகள்படி நாங்கள் அவர்களுக்கு கூறியிருந்தோம். அதில், 25 எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவை ஏற்று நடந்தார்கள். 22 எம்.எல்.ஏ.க்கள் அதிமுக கொறடா உத்தரவை நிராகரித்துள்ளனர்.

எனவே, சட்டப்பேரவை சபாநாயகரை எங்கள் அதிமுக குழு சந்தித்து, 22 பேர் மீதும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம். பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதுதான் சட்ட விதி. சட்டமன்றக் கட்சி என்பதுதான் செல்லும். அதைத்தான் நீதிமன்றங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. பெரும்பான்மைதான் செல்லும். சபாநாயகர் உரிய விதிகளின்படி நல்ல முடிவு எடுப்பார்” இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com