

திருநெல்வேலி,
திருநெல்வேலியில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த மோப்ப நாய் சீஸருக்கு காவல்துறை மரபின்படி 24 குண்டுகள் முழங்க மாவட்ட காவல் துறை சார்பில் அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் மோப்ப நாய் படைப்பிரிவில் பணியாற்றி வந்த "சீஸர்" என்ற மோப்ப நாய் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது.
நீண்ட காலமாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் மோப்ப நாய் படைப்பிரிவில் சிறப்பாகப் பணியாற்றி வந்த சீஸர் (Caesar), பல்வேறு குற்றவியல் விசாரணைகள், தடயங்களை கண்டறிதல், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை கண்டறிதல் உள்ளிட்ட முக்கிய காவல் பணிகளில் திறம்பட செயல்பட்டு காவல்துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தது. உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சீஸர் உயிரிழந்தது காவல்துறையினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீஸரின் சேவையைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. காவல்துறை மரபின்படி 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சீஸருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காவல் அமலாக்கப் பிரிவு (PEW) டி.எஸ்.பி. சந்திரன், மோப்ப நாய் படைப்பிரிவு காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, சீஸரின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை நினைவுகூர்ந்தனர்.