

சென்னை,
இந்தியாவின் முதல் உள்நாட்டு மோட்டார் சக்கர நாற்காலியை சென்னை ஐ.ஐ.டி. தயாரித்துள்ளது. இதுகுறித்து ஐ.ஐ.டி. மெக்கானிக்கல் என்ஜினீயரிங்துறை பேராசிரியர் சுஜாதா ஸ்ரீநிவாசன் கூறியதாவது:-
நியோபோல்ட்' என்று அழைக்கப்படும் இந்த மோட்டார் சக்கர நாற்காலியை சாலைகளில் மட்டுமல்ல, சீரற்ற நிலப்பரப்புகளிலும் பயன்படுத்தலாம். அதிகபட்சமாக 25 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 25 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம்.
ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடுகையில் இந்த சக்கர நாற்காலி மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி நிறைந்தது. பாதுகாப்பானது. இதில் அமர்ந்த நிலையிலேயே எழுந்து நிற்க கூடிய வகையில் அரைஸ்' எந்திரம் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த எந்திரம் நியோமோஷன்' என்ற தொழில்முனைவு நிறுவனம் மூலம் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர் ஸ்வாஸ்திக் சவுரவ் டாஷ் கூறும்போது, இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் நிலைமையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது எங்கள் நோக்கம் ஆகும். தற்போது 28 மாநிலங்களில் 600-க்கும் அதிகமான பயனாளிகள் இந்த சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகின்றனர் என்றார்.