டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு; அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு

ஊதிய உயர்வால் அரசுக்கு ரூ.110.74 கோடி கூடுதல் செலவாகும்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு; அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு
Published on

சென்னை

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்படுகிறது என்று அமைச்சர் விக்னேஷ் அறிவித்து உள்ளார்.

தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர், டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீதம் ஊதியம் உயர்த்தப்படுகிறது என அறிவித்துள்ளார். இதன்படி, ரூ.3,500 முதல் ரூ.5 ஆயிரம் வரை சம்பள உயர்வு இருக்கும். இதனால், இதுவரை இல்லத வகையில் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து அவர் கூறும்போது, டாஸ்மாக் விற்பனையாளர்கள் சம்பளம் ரூ.19,413 ஆக உயர்த்தப்படுகிறது. டாஸ்மாக் துணை விற்பனையாளர்கள் சம்பளம் ரூ.17,925 ஆகவும், டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் சம்பளம் ரூ.22,313 ஆகவும் உயர்த்தப்படும்.

கூடுதல் செலவு

ஊதிய உயர்வால் அரசுக்கு ரூ.110.74 கோடி கூடுதல் செலவாகும். அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு கூடுதலான நேரத்தில், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வது தடுக்கப்பட்டு உள்ளது. எம்.ஆர்.பி. விலையில் மது விற்பனை செய்வதற்கும், முறைகேட்டை தவிர்க்கவும் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மது விலையை உயர்த்தி வருவாயை பெருக்குவது அரசின் நோக்கமல்ல. மதுபானங்களின் விலை உயராது என கூறினார்.

பணி நீக்க எச்சரிக்கை

கூடுதலாக ரூ.10 வசூல் செய்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. கூடுதலான விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலான விலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தால் பணி நீக்கம் வரை நடவடிக்கை இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

ரூ.10 கூடுதலாக வாங்கும் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறோம். இதுவரை 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர் என கூறிய அவர், பப்புகளில் 21 வயதுக்குட்பட்டோரை அனுமதிக்க கூடாது. மீறினால் அந்த பப்புகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தும் உள்ளார்.

20 ஆண்டு கால கோரிக்கைகள்

டாஸ்மாக் ஊழியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. டாஸ்மாக் பார்க்ளுக்கான உரிமம் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com