ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் 25 பதவியிடம் காலி

திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 25 பதவியிடம் காலியாக உள்ளது.
ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் 25 பதவியிடம் காலி
Published on

திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 25 பதவியிடம் காலியாக உள்ளது. அதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையாளர் பழனிகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மாநில தேர்தல் ஆணையாளர்

தமிழக மாநில தேர்தல் ஆணையாளர் பழனிகுமார் தலைமையில் தேர்தல் பணிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் காலிப்பணியிட விவரம், மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் இருப்பில் உள்ள விவரம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பு விவரம், தேர்தல் பொருட்கள் இருப்பு விவரம், தேர்தல் வழக்குகள் குறித்த விவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காவல்துறை பாதுகாப்பு விவரம் தொடர்பாகவும் ஆய்வு நடத்தப்பட்டது.

25 பதவியிடம் காலி

ஊரக உள்ளாட்சி அமைப்பில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி 19 காலியிடம் உள்ளது. ஊராட்சி துணை தலைவர் பதவி 3 காலியிடம் உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவி 2, நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவி 1 காலியாக உள்ளது. இந்த காலியிடங்கள் இறப்பு மற்றும் ராஜினாமா ஆகிய காரணங்களால் ஏற்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று முடிந்த மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் தொடர்பாக கேட்டறிந்தார்.

இந்த கூட்டத்தில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் வனிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com