

சென்னை,
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்.டி.இ.) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி, நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 7 ஆயிரத்து 740 தனியார் பள்ளிகளில் 82 ஆயிரத்து 888 காலி இடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டன.
அதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 18-ந்தேதி வரை நடந்தது. விண்ணப்பப் பதிவு 18-ந்தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில் மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 537 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கான மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு நேற்று முன்தினம் நடைபெற்றது.
பள்ளிகளில் இருந்த இடங்களை காட்டிலும் அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் அங்கு குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதனை உறுதி செய்ய அவகாசமும் வழங்கப்பட்டிருப்பதாகவும், மேலும் சிலர் காத்திருப்பு பட்டியலில் இருப்பதாகவும், அதன் விவரங்கள் குறித்து ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்பட உள்ளதாகவும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.