

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (11.06.2026) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைமை அலுவலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் தலைமையிலும், மதிப்பிற்குரிய தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு ப கிருஷ்ணன் முன்னிலையிலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் தெரிவிக்கையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னையில் 21 திட்டப்பகுதிகளில் ரூ.1 ஆயிரத்து 230.42 கோடி மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 179 அடுக்குமாடி குடியிருப்புகளும், இதர மாவட்டங்களில் 39 திட்டப்பகுதிகளில் ரூ.2 ஆயிரத்து 535.82 கோடி மதிப்பீட்டில் 21 ஆயிரத்து 372 அடுக்குமாடி குடியிருப்புகளும் ஆகமொத்தம், 60 திட்டப்பகுதிகளில் ரூ.3 ஆயிரத்து 766.24 கோடி மதிப்பீட்டில் 28 ஆயிரத்து 551 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் கீழ், 6 திட்டப்பகுதிகளில் ரூ.1 ஆயிரத்து 30 கோடி மதிப்பீட்டில் 5 ஆயிரத்து 457 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.210 கோடி மதிப்பீட்டில் 215 திட்டப்பகுதிகளில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்காக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை நல்ல தரத்துடனும், உறுதியிடனும், உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இவ்வாய்வுக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ரா.கிர்லோஷ் குமார், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி. சிங், வாரிய இணை மேலாண்மை இயக்குநர் செல்வி அனாமிகா ரமேஷ், வாரிய செயலாளர் செ.வெங்கடேஷ், வாரிய நிதி ஆலோசகர் திரு.சு.ஷண்முகநாதன், கண்காணிப்பு பொறியாளர்கள், நிர்வாக பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.