சென்னையில் கடந்த 21 நாட்களில் 29 ஆயிரம் நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

கோப்புப்படம்
தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை கடந்த 9-ந்தேதி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த ஆண்டு தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட தெருநாய்கள் கணக்கெடுப்பில் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொதுமக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிடவும் அனைத்து தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டது.
அந்த வகையில், தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை கடந்த 9-ந்தேதி மேயர் பிரியா தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக மணலி, மாதவரம் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, கடந்த மாதம் 9-ந்தேதி முதல் நேற்று வரையில் (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) 21 நாட்களில் 29 ஆயிரத்து 748 தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






