கடம்பூரில் 2-வது நாளாககடை அடைப்பு போராட்டம்

கடம்பூரில் 2-வது நாளாக கடை அடைப்பு போராட்டம் நடந்தது.
கடம்பூரில் 2-வது நாளாககடை அடைப்பு போராட்டம்
Published on

கயத்தாறு:

கடம்பூரில் நேற்று 2-வது நாளாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மேலும், அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ரேஷன் கார்டுகளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

உண்ணாவிரத போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா கடம்பூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி பல்வேறு அதிகாரிகளுக்கு கிராம மக்கள் மனு கொடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து நேற்று முன்தினம் கிராம மக்கள் மற்றும் கடம்பூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மேலும் கடம்பூரில் வியாபாரிகள் அனைத்து கடைகளையும் அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதற்கிடையே, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

2-வது நாளாக கடையடைப்பு

ரயில்வே துறையில் இருந்து எந்த பதிலும் இல்லை என்பதால் நேற்று 2-வது நாளாக கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் ஆட்கள் நடமாட்டமின்றி, கடம்பூர் பஜார் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் கோரிக்கையை வலியுறுத்தி தங்களது ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க இருப்பதாகவும், கடம்பூர், கயத்தாறு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மக்களை ஒன்று திரட்டி விரைவில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்து இருப்பதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com