கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்து விழுந்து 3 பக்தர்கள் பலி

அரக்கோணம் அருகே கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்து விழுந்து 3 பக்தர்கள் பலியானார்கள். படுகாயம் அடைந்த 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்து விழுந்து 3 பக்தர்கள் பலி
Published on

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நெமிலி கீழவீதி கிராமத்தில் மாவடியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் 8-ந் தேதி மயிலார் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பலர் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அலகு குத்தி வந்தனர். அப்போது வீதியுலா வந்த சாமிக்கு கிரேன் மூலமாக மாலை அணிவிக்க முயன்றனர். மேடு பள்ளமான இடத்தில் நிறுத்தப்பட்டதால் திடீரென கிரேன் கவிழ்ந்தது.

3 பேர் பலி

இந்த விபத்தில் கீழவீதியை சேர்ந்த முத்துகுமார் (வயது 39), பூபாலன் (40), ஜோதிபாபு (19) ஆகியோர் கிரேனில் இருந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும் திருத்தணியை சேர்ந்த கதிர் (19), பெரப்பேரியை சேர்ந்த சின்னசாமி உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதில் கதிர், சின்னசாமி ஆகியோர் மட்டும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கபபட்டனர். மற்றவர்கள் அரக்கோணத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கிரேன் கீழே விழுவது போன்ற காட்சி சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com