

சென்னை,
சென்னையில் 300 கிலோ ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்திருந்த 3 பேர் சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடி, புதுநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, வெளியில் அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருப்பதாக சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி. கோபாலகுரு தலைமையில், சிவில் சப்ளை சி.ஐ.டி. தனிப்படை போலீசார் குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 300 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளர் செந்தில்முருகன், உதவியாளர் சியாம் மூர்த்தி, அரிசியை வாங்கி பதுக்கிய முகமது அலியார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.