குடும்ப பிரச்சினையில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை முயற்சி: தாய், மகன் உயிரிழந்த சோகம்


குடும்ப பிரச்சினையில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை முயற்சி: தாய், மகன் உயிரிழந்த சோகம்
x

சகரியாவின் உடலில் 90 சதவீதம் தீக்காயங்கள் இருந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்தவர் சகரியா (66 வயது). இவர் தனது மனைவி மெர்சி (57 வயது) மற்றும் இளைய மகன் ஹார்லி பினோ (27 வயது) உடன் வசித்து வந்தார். இன்று மாலை மூவரும் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினர் மூவரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மெர்சி மற்றும் பினோ இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சகரியாவின் உடலில் 90 சதவீதம் தீக்காயங்கள் இருந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story