

வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
இன்னிசை நிகழ்ச்சி
புள்ளம்பாடி ஒன்றியம் வெங்கடாசலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம். இவரது மகன் திவாகரன் (வயது 20). இவர் நேற்று முன்தினம் இரவு காணக்கிளியநல்லூர் கிராமத்தில் நடந்த இன்னிசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
புள்ளம்பாடி கிளை வாய்க்கால் பிரிவு அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த திவாகரன் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு விபத்து
புதுக்கோட்டை அருகே உள்ள இலுப்பூரை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் பால்ராஜ் (37. இவர் நேற்று இரவு தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு கடைக்கு செல்வதற்காக சென்டர்மீடியனில் உள்ள தடுப்பு கம்பியை தாண்டி சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.வி.மெக்கானிக் பலி
இதேபோல் வாத்தலை அருகே உள்ள குணசீலம் வடக்கு குடித்தெருவை சேர்ந்த மனோகர் மகன் முருகதாஸ் (36). இவர் திருச்சி நெ.1டோல்கேட்டில் டி.வி மெக்கானிக் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் முருகதாஸ் நேற்று வழக்கம்போல் பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். திருச்சி - நாமக்கல் நெடுஞ்சாலையில் நம்பர் 2 கரியமாணிக்கம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிரே சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் முருகதாஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முருகதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.