பூக்களின் விலை 3 மடங்கு உயர்வு

பூக்களின் விலை 3 மடங்கு உயர்வு
Published on

தீபாவளியையொட்டி பூக்களின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. விற்பனையில் விறு விறுப்புக்கு குறைவில்லை

பூக்கள் விற்பனை

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்கு பூக்களின் பயன்பாடு எப்போதுமே அதிகமாக இருக்கும். அந்த வகையில் விருதுநகரிலும் தீபாவளி பண்டிகையையொட்டி பூக்களின் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. வழக்கமாக மல்லிகை, பிச்சி, கனகாம்பரம் போன்ற பூக்கள் வெளியில் இருந்து வர வேண்டிய நிலையில் செவ்வந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் விருதுநகரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு மல்லிகை பூ கிலோ ரூ.500 ஆக இருந்த நிலையில் நேற்று தீபாவளியையொட்டி மல்லிகையின் விலை ரூ. 1,500 ஆக உயர்ந்தது. இதேபோன்று பிச்சிப்பூவின் விளையும் 2 தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.300 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.ஆயிரமாக அதிகரித்துள்ளது.

விலை உயர்வு

கனகாம்பரம், செவ்வந்தி ஆகிய பூக்களில் விலையும் 2 மடங்கு அதிகரித்துள்ளது. ரோஜா கிலோ ரூ.50 ஆக இருந்த நிலையில் நேற்று ரூ.150-க்கு விற்பனையானது. இதுபற்றி விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவில் அருகே பூ வியாபாரம் செய்து வரும் விக்னேஷிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

2 தினங்களுக்கு முன்பு கேட்பாறு இல்லாமல் இருந்த பூ வகைகள் தற்போது 3 மடங்கு விலை உயர்விலும் விறுவிறுப்பாக விற்பனையாகி வருகிறது. பிச்சிப்பூ வரத்து காரணமாக மல்லிகையின் விலை ரூ. 1,500 ஆக உள்ளது. இல்லையேல் மல்லிகையின் விலை ரூ. 2ஆயிரத்தை எட்டிவிடும். ரோஜாவின் விலையும் 3 மடங்கு உயர்ந்துள்ளது. தீபாவளி தினத்தில் பூக்களின் விற்பனை மந்தமாகிவிடும். ஒரே நாள் தான் பூக்களின் விற்பனை விறுவிறுப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல ஜவுளி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com