இருக்கன்குடிக்கு பாதயாத்திரை சென்ற 3 பெண்கள் கார் மோதி பலி

25க்கும் மேற்பட்ட பெண்கள் திருச்செந்தூரிலிருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வழிபாட்டிற்காக பக்தர்கள் குழுவாக பாத யாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
இருக்கன்குடிக்கு பாதயாத்திரை சென்ற 3 பெண்கள் கார் மோதி பலி
Published on

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், செந்தில்வீதி தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மனைவி சுந்தரராணி (வயது 60), வடிவேல் மனைவி இசக்கியம்மாள்(55), கரும்பவிலை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் மனைவி கஸ்தூரி(55) உள்பட 25க்கும் மேற்பட்ட பெண்கள் திருச்செந்தூரிலிருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வழிபாட்டிற்காக பக்தர்கள் குழுவாக பாத யாத்திரையாக நேற்று நடந்து சென்று கொண்டிருந்தனர்.

தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலை ரோட்டில் குறுக்குச்சாலை அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, திருச்செந்தூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பெண் பக்தர்கள் மீதுமோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுந்தரராணி, கஸ்தூரி, இசக்கியம்மாள் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்துக்கு காரணமான காரின் டிரைவரான தஞ்சாவூர் வடக்கு கேட் பகுதியை சேர்ந்த முத்துராஜ் மகன் ராம்பிரசாத் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com