

திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்சாலையில் தங்கி வேலை பார்க்கும் வடமாநில தம்பதியின் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நிலையில் முட்புதரில் இருந்து மீட்கப்பட்டது.
உடனடியாக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதையடுத்து குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த பிபின் மஞ்சி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில், 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து அம்மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி உட்கோட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்ட சிறுமியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக சரிபார்க்கப்படாத தகவல்கள் மற்றும் பொய்யான செய்திகளை எந்த ஒரு ஊடகத்திலும் பரப்புவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.