30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 1 Jun 2025 12:32 PM IST (Updated: 1 Jun 2025 12:33 PM IST)
t-max-icont-min-icon

ஓரணியில் தமிழ்நாடு; புதிய உறுப்பினர் சேர்க்கை திட்டம் குறித்து திமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

மதுரை,

மதுரை, உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இப்பொதுக்குழுவில், "மண் - மொழி - மானம் காத்திட 'ஓரணியில் தமிழ்நாடு' புதிய உறுப்பினர் சேர்க்கை திட்டம்" குறித்து சிறப்புத் தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

"எல்லாருக்கும் எல்லாம்' எனும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதேனும் ஒரு திட்டத்தில் பயனாளியாக உள்ளனர். இத்தகைய நலத்திட்டங்களும், மாநிலத்தின் வளர்ச்சியும், தொடர்ந்திடவும், மாநில உரிமைக்கான போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுக்கவும், நமது மண், மொழி, மானம் காத்திடவும் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைத்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

துளியும் சமரசமின்றி நெஞ்சுரத்தோடு தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடும் பொருட்டு "ஓரணியில் தமிழ்நாடு" என உறுப்பினர் சேர்க்கையை கழகம் முன்னெடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. திமுக சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டிகள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுகவின் உறுப்பினராக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

வீடு வீடாகச் சென்று அரசின் திட்டங்களையும், உரிமைப் போராட்டங்களையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டின் வாக்காளர்களை 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முன்னெடுப்பில் இணைப்பதற்கான செயல்களை மேற்கொண்டு, அடுத்து வரும் இரண்டு மாதங்களில் மாவட்ட - பகுதி - நகர - ஒன்றிய - பேரூர் - வட்ட - கிளை கழகச் செயலாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை நிறைவு செய்திட வேண்டும்.

அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் தொடங்கி, பாக முகவர்கள் வரை கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் இதில் முழுமூச்சாக உழைத்திட வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணியை தொகுதி பார்வையாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் முழுமையாகக் கண்காணித்து வெற்றிகரமாக்கிட வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story