சென்னை மீனவர்கள் 300 பேரை ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்தனர்

விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற சென்னை மீனவர்கள் 300 பேரை ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்து உள்ளனர்.
சென்னை மீனவர்கள் 300 பேரை ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்தனர்
Published on

ராயபுரம்,

ஒவ்வொரு படகுகளுக்கும் தலா ரூ.2 லட்சம் தர வேண்டும் என மிரட்டல் விடுத்து உள்ளனர்.

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள், 61 நாள் மீன்பிடி தடை காலம் முடிந்து கடந்த 16-ந் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மொத்தம் 35 விசைப்படகுகளில் 300 மீனவர்கள் ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபட்டினம், மண்ணூர் கடல் பகுதிகளில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது ஆந்திர மாநில மீனவர்கள் பைபர் படகுகளில் அங்கு வந்தனர். திடீரென அவர்கள், சென்னை மீனவர்கள் 300 பேரையும் சுற்றி வளைத்து சிறை பிடித்தனர். பின்னர் அவர்களை கரைக்கு அழைத்துச் சென்று அங்கேயே வைத்து உள்ளனர்.

ஒவ்வொரு படகுக்கும் தலா ரூ.2 லட்சம் கொடுத்தால் மட்டுமே மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிப்போம் என்று ஆந்திர மீனவர்கள் மிரட்டல் விடுத்து உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தமிழக மீன் வளத்துறை இயக்குனர் சந்திரா மற்றும் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் உள்பட காசிமேடு பகுதியில் உள்ள பல்வேறு மீனவ சங்கங்களை சேர்ந்தவர்கள் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆந்திரா புறப்பட்டு சென்று உள்ளனர்.

ஆந்திர மீனவர்கள் எதற்காக சென்னை மீனவர்கள் 300 பேரை சிறை பிடித்து வைத்து உள்ளனர் என்பது தெரியவில்லை. சென்னை மீனவர்கள் விடுவிக்கப்பட்டால்தான் அதற்கான உண்மையான காரணம் என்ன? என்பது தெரியவரும். இதனால் காசிமேடு மற்றும் அதை சுற்றி உள்ள மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com