

சென்னை,
தண்டையார்பேட்டை , அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி மண்டலடங்களில் உள்ள விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சட்ட விரோதமாக பொருத்தப்பட்டிருந்த 34 குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்கள் பறிமுதல். இதுதொடர்பாக, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மின் மோட்டார்கள் பறிமுதல்
நேற்று தண்டையார்பேட்டை , அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி மண்டலடங்களில் உள்ள விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சட்ட விரோதமாக பொருத்தப்பட்டிருந்த 34 குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு கண்காணிப்பு குழு
குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் அழுத்த குறைபாடு தவிர்க்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள அனைத்து நுகர்வோருக்கும் சீரான மற்றும் சமமான குடிநீர் விநியோகம் உறுதி செய்யும் வகையில் மண்டலம் 1 முதல் 15 வரையிலான அனைத்து பகுதிகளிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கைகள்
இக்குழுவினர் ஆய்வு மேற்கொள்ளும்போது, குடிநீர் இணைப்புகள் மற்றும் பொது குழாய்களில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு உரிய சட்டவிதிகளின் கீழ் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஏற்கனவே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு
இந்நிலையில் நேற்று சிறப்பு கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது தண்டையார் பேட்டை மண்டலம் வார்டு எண் -37 எம்.கே.பி நகர், அம்பத்தூர் மண்டலம் வார்டு எண்-81, ஒ.டி பஸ் நிலையம், வார்டு-91 முகப்பேர், அண்ணா நகர் மண்டலம் வார்டு எண்-106 சூளை மேடு, தேனாம்பேட்டை மண்டலம் வார்டு எண் -110 வள்ளுவர் கோட்டம், வார்டு -111-கிரீம்ஸ் ரோடு, வார்டு-112 டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம் மண்டலம் வார்டுஎண் -138 எம்.ஜி.ஆர் நகர், அடையாறு மண்டலம் வார்டு எண்-178 தரமணி, பெருங்குடி மண்டலம் வார்டு-181 கொட்டிவாக்கம், மற்றும் வார்டு எண் -182 கந்தன்சாவடி ஆகிய இடங்களில் குடிநீர் குழாய்களில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுறியப்பட்டு 34 மின்மோட்டார்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, ஏற்கனவே அடையாறு மண்டலத்தில் மட்டும் சட்ட விரோதமாக பொருத்தப்பட்டிருந்த 55 குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார்கள் பறிமுதல்.
செய்யப்பட்டதுடன், இதுவரை 89 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மேற்கூறிய இடங்களில் உள்ள குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு இனிவரும் காலங்களில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார்களை பயன்படுத்த கூடாது எனவும், மீறுவோரின் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கை (நோட்டீஸ்) வழங்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.