

விழுப்புரம்,
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த பேருந்து நடத்துனரை போலீசார் கைது செய்துள்ளனர்.தமிழகத்தில் குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப்பாக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அண்டை மாநிலமான ஆந்திராவிலிருந்து இவை கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பேருந்தில் நடத்தப்பட்ட சோதனையில், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பேருந்தின் நடத்துனர் தனது கட்டுப்பாட்டில் 34 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை பதுக்கி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், நடத்துனரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்திலேயே பணியில் இருக்கும் ஊழியரே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.