ஊசி போட்ட கர்ப்பிணிகள் உட்பட 36 பேருக்கு திடீர் நடுக்கம், காய்ச்சல் - அரசு மருத்துவமனையில் பரபரப்பு

ஊசி, மருந்து பொருட்களை ஆய்வு செய்த பிறகே நடுக்கம், காய்ச்சல் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் அரசு தாய்சேய் நல மையம் இயங்கி வருகிறது. இங்கு மகப்பேறு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கர்ப்பிணி பெண்கள் வந்து செல்கின்றனர். நேற்று இரவு அங்கு சிகிச்சை பெற்ற கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மருத்துவர்கள் ஊசி போட்டனர்.
இந்த நிலையில் திடீரென அவர்களுக்கு நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தலைமை மருத்துவர் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாற்று மருந்து கொடுத்தனர்.
மாற்று மருந்து கொடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் 30-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நிலை சீரான நிலையில், 5 பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் மகப்பேறு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ள பெண்களின் குடும்பத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.
பெண்களுக்கு செலுத்தப்பட்ட ஊசி, மருந்து பொருட்களை ஆய்வு செய்த பிறகே நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரும் என தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.






