படகில் கடத்தி வந்த 3½ கிலோ தங்கம் சிக்கியது: இலங்கை வாலிபர்கள் உள்பட 7 பேர் கைது

ராமேசுவரம் கடலில் படகில் கடத்தி வரப்பட்ட 3½ கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த 3 பேர் உள்பட 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
படகில் கடத்தி வந்த 3½ கிலோ தங்கம் சிக்கியது: இலங்கை வாலிபர்கள் உள்பட 7 பேர் கைது
Published on

ராமேசுவரம்,

இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் நேற்று முன்தினம் தனுஷ்கோடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இலங்கையை சேர்ந்த ஒரு பிளாஸ்டிக் படகில் 3 பேர் இருப்பதை கண்ட அவர்கள் உடனே அந்த படகை கடற்கரைக்கு கொண்டு செல்லும்படி எச்சரித்தனர். பின்னர் அந்த படகு அரிச்சல்முனை கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.

இதனிடையே இதுகுறித்து இந்திய கடற்படையினர் மரைன் போலீசாருக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு மரைன் போலீசாரும், கியூ பிரிவு, உளவுத்துறையினரும் விரைந்து வந்து அந்த படகை கைப்பற்றி அதில் இருந்த 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த லூயி அலாசிஸ் (வயது 31), சுதன்(26), வெனிஸ்டோ(24) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரித்த போது, மீன்பிடிக்க வந்ததாகவும், திசை தெரியாமல் இங்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் 3 பேரையும் தனித்தனியாக அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் 3 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்திருப்பதும், அதனை ராமேசுவரத்தை சேர்ந்த 4 பேரிடம் ஒப்படைக்க இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் வைத்திருந்த செல்போனை போலீசார் கைப்பற்றி சோதனையிட்டனர். இதில் ராமேசுவரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த லட்சுமணன்(44), தெற்கு கரையூர் பகுதியை சேர்ந்த சர்வேஸ்வரன் (38), தங்கச்சிமடத்தை சேர்ந்த தனிஸ் சியோன் (38), டியோனிஸ் (34) ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த 4 பேரையும் போலீசார் பிடித்து வந்து விசாரித்தனர். மேலும் சுங்க இலாகா மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர்.

இலங்கை வாலிபர்கள் தாங்கள் வந்த படகிலேயே தங்கத்தை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த படகில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ தங்கத்தை போலீசார் கைப்பற்றினர்.

இதன் மதிப்பு ரூ.1 கோடியே 45 லட்சம் ஆகும். இதையடுத்து 7 பேரையும் கைது செய்த போலீசார் மேலும் இதில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com