பணம் இரட்டிப்பாக தருவதாக ரூ.80 லட்சம் மோசடி... தொழில் அதிபரை கடத்திய 4 பேர் கைது

ஆனந்தகுமார் உள்பட 10 பேரும் அவரை கடத்தி பணம், நகையை பறித்ததும் தெரியவந்தது.
கைது
Published on

கோவை,

கோவையில் நடந்த கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக தொழில் அதிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியை சேர்ந்தவர் தேப்ஜித் ரானா (வயது 25). தொழில் அதிபரான இவர் திருப்பூரில் ஜவுளிக்கடை நடத்தி வருவதாகவும், தனது ஜவுளிக்கடையில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக திரும்ப கொடுப்பதாகவும் அறிவித்து இருந்தார். அதை நம்பி கோவையை சேர்ந்த ஆனந்தகுமார். அவருடைய நண்பர் செந்தில்குமார் உள்பட 10 பேர் தேப்ஜித் ரானாவிடம் ரூ.80 லட்சம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

பணத்தை பெற்றுக்கொண்ட அவர், கூடுதல் லாபமோ அல்லது அவர்கள் முதலீடு செய்த பணத்தையோ திரும்ப கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

வழக்குப்பதிவு

இந்த நிலையில் தேப்ஜித் ரானா தனது நண்பர் சித்தார்த், ஆதர்ஷ் குமார் ஆகியோருடன் கோவை வந்தார். பின்னர் கோவையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார். அதை அறிந்த ஆனந்தகுமார். செந்தில்குமார் உள்பட 10 பேரும் அங்கு சென்றனர்.

பின்னர் தேப்ஜித் ரானா உள்பட 3 பேரையும் காரில் கடத்திச்சென்று ரூ.26 லட்சம் மற்றும் 1 பவுன் நகை ஆகியவற்றை பறித்தனர். இது குறித்து தேப்ஜித் ரானா பீளமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மோசடி

அதில் தேப்ஜித் ரானா, இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி ரூ.80 லட்சத்தை பெற்றுக்கொண்டு, லாபத்தை கொடுக்க மறுத்ததுடன் முதலீடு செய்த பணத்தையும் கொடுக்காமல் மோசடி செய்ததும், இதனால்தான் ஆனந்தகுமார் உள்பட 10 பேரும் அவரை கடத்தி பணம், நகையை பறித்ததும் தெரியவந்தது.

எனினும் தேப்ஜித் ரானாவை கடத்தி சென்று பணத்தை பறித்த வழக்கில் திண்டுக்கல்லை சேர்ந்த வினோத் (37). வினோத்குமார் (39), திருச்சியை சேர்ந்த சண்முகராஜ் (44), மயிலாடுதுறையை சேர்ந்த செந்தில்குமார் (45) ஆகிய 4 பேரை பீளமேடு போலீசார் கைது செய்தனர். மீதமுள்ள 6 பேரை தேடி வருகின்றனர். இதற்கிடையே செந்தில்குமார் தான் உள்பட 10 பேரிடம் தேப்ஜித் ரானா, சித்தார்த் சர்மா ஆகியோர் ரூ.80 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர்.

கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேப்ஜித் ரானா, சித்தார்த் சர்மா ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com