பெயிண்ட் தொழிற்சாலை தீ விபத்தில் 4 பேர் பலி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தனியார் பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
பெயிண்ட் தொழிற்சாலை தீ விபத்தில் 4 பேர் பலி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
Published on

சென்னை,

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வந்த தனியார் பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது;

"திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், காக்களூர் கிராமத்தில் இயங்கிவரும் சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ZEN PAINTS என்ற தனியார் நிறுவனத்தில் நேற்று மாலை சுமார் 4.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில், இந்நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த சென்னை, அம்பத்தூர், மேனாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த திருமதி.சுகந்தி (வயது 55) க/பெ.பக்தவச்சலம், திருவள்ளூர் வட்டம், கடம்பத்தூர் கிராமம், பெரிய தெருவைச் சேர்ந்த திரு.பார்த்தசாரதி (வயது 51) த/பெ. புவனேந்திரன் மற்றும் சென்னை, அம்பத்தூர், விஜயலட்சுமிபுரம், பிரகாசம் தெருவைச் சேர்ந்த திரு.புஷ்கர் (வயது 37) த/பெ.கணேசன் ஆகிய மூன்று தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

மேலும், இவ்விபத்தின்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த திருவள்ளூர், காந்திபுரம், பெரியகுப்பத்தைச் சேர்ந்த திரு.சீனிவாசன் (வயது 37) த/பெ. இருசப்பன் என்பவர் மீது இந்நிறுவனத்தின் சுவர் இடிந்து மேற்கூரை விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com