புகையிலை பொருட்கள் கடத்திய 4 பேர் கைது

கன்னிவாடி அருகே புகையிலை பொருட்கள் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார், ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
புகையிலை பொருட்கள் கடத்திய 4 பேர் கைது
Published on

போலீசாரை கண்டதும் ஓட்டம்

கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன் தலைமையிலான போலீசார், கன்னிவாடி அருகே உள்ள காரமடையில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள் அடுத்தடுத்து வந்தது.

போலீசாரை கண்டதும் கார் மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர்கள் தங்களது வாகனங்களை திருப்பி தப்பி செல்ல முயன்றனர். மேலும் அந்த 2 வாகனங்களிலும் நம்பர் பிளேட் இல்லை. இதனை பார்த்த போலீசார், விரட்டி சென்று 2 வாகனங்களை மடக்கி பிடித்தனர்.

கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல்

பின்னர் காரில் வந்த 3 பேரையும், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரையும் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் திண்டுக்கல் அருகே உள்ள அகரம் சுக்காம்பட்டியை சூரியபிரகாஷ் (வயது 24), உலகம்பட்டியை சேர்ந்த சேசுராஜ் (62), ஆத்தூர் என்.பஞ்சம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (39), வெயிலடிச்சான்பட்டியை சேர்ந்த நல்லபாண்டி (25) என்பதும், வாகனங்களில் 210 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள், ரூ.4 லட்சம், 210 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com