வீட்டின் மீது லாரி மோதி 4 பேர் படுகாயம்

சேத்துப்பட்டு அருகே வீட்டின் மீது லாரி மோதி 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
வீட்டின் மீது லாரி மோதி 4 பேர் படுகாயம்
Published on

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு அருகே வீட்டின் மீது லாரி மோதி 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

லாரி மோதியது

வந்தவாசியில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி போளூர் நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.

சேத்துப்பட்டு அருகே நம்பேடு கிராமம் வழியாக சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதியது.

மேலும் அருகில் இருந்த வீட்டின் மீது மோதி நின்றது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

4 பேர் படுகாயம்

இதில்வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணன் (வயது 66), அவரது மனைவி ஜெயலட்சுமி. (60), மகன் ஏழுமலை (33). மருமகள் சுகன்யா (28) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக வந்து படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணன், ஜெயலட்சுமி, ஏழுமலை ஆகிய 3 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் லாரி ஓட்டி வந்த டிரைவர் மோகன் சேத்துப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com