திறனறித் தேர்வை 4,520 மாணவ-மாணவிகள் எழுதினர்

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற திறனறித் தேர்வை 4,520 மாணவ- மாணவிகள் எழுதினர்.
திறனறித் தேர்வை 4,520 மாணவ-மாணவிகள் எழுதினர்
Published on

திறனறித் தேர்வு

தமிழ்நாட்டில் பிளஸ்-1 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு முதல்வரின் திறனறித் தேர்வை நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது. அதன்படி இத்தேர்வை எழுத விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வு நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, அவலூர்பேட்டை, பிரம்மதேசம், மரக்காணம், மேல்மலையனூர், மயிலம், திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம், திருச்சிற்றம்பலம், கிளியனூர், கண்டமங்கலம், கோலியனூர், தும்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 21 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது.

4,520 மாணவர்கள் எழுதினர்

இத்தேர்வை எழுதுவதற்கு 1,584 மாணவர்களும், 3,117 மாணவிகளும் ஆக மொத்தம் 4,701 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர். இவர்களில் 97 மாணவர்கள், 84 மாணவிகள் என 181 பேர் தேர்வு எழுத வரவில்லை. 1,487 மாணவர்களும், 3,033 மாணவிகளும் ஆக மொத்தம் 4,520 மாணவ- மாணவிகள் தேர்வை எழுதினர்.

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மையங்களில் நடைபெற்ற தேர்வை கல்வித்துறை அலுவலர்கள் பார்வையிட்டனர். தேர்வு நடைபெற்ற மையங்களிலும், வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com