

சென்னை,
தென்மேற்கு பருவக் காற்று காரணமாக, 5 நாட்களுக்கு தமிழகம், புதுவை உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தென்மேற்கு பருவக் காற்று காரணமாக, செப்டம்பர் 7 முதல் 11ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக சோழிங்கநல்லூர், அம்பத்தூரில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இன்று முதல் வருகின்ற 11ம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதி ,மத்திய வங்கக் கடல், தெற்கு வங்கக்கடல் ,தென் கிழக்கு, மத்திய வங்கக் கடல் ,தெற்கு அந்தமான் கடல் பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.