மெரினா கடற்கரை தூய்மை பணியில் 5 ஆயிரம் பேர்: மேயர் தொடங்கி வைத்தார்

மெரினா கடற்கரை தூய்மைப் பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மெரினா கடற்கரை தூய்மை பணியில் 5 ஆயிரம் பேர்: மேயர் தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மாநில நாட்டு நலப்பணித் திட்டக் குழுமம், இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் மெரினா கடற்கரையில் இன்று "நம்ம சென்னை நம்ம பொறுப்பு", "நம்ம மெரினா, நம்ம பெருமை" என்ற உணர்வுடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற மாபெரும் மெரினா கடற்கரை தீவிர தூய்மைப் பணியினை மேயர் பிரியா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, கடற்கரை தூய்மைப் பணியில் ஈடுபட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், சென்னை மாநகரை சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்கவும் பொதுமக்கள் தங்களது பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று விழிப்புணர்வினை ஏற்படுத்தி, பிளாஸ்டிக் மற்றும் பிற குப்பைகளை அகற்றினார்கள்.

இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அனைவரும் தங்கள் நண்பர்களையும் ஊக்குவிக்க வேண்டும். இதனை தனி ஒருவரின் செயலாக தொடங்கி, சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு சிறந்த முயற்சியாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். தூய்மையான, பசுமையான சென்னையை உருவாக்க, இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியம் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ. குமரகுருபரன், மத்திய வட்டார துணை ஆணையாளர் கே. ஜெ. பிரவீன் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com