நடிகைகளுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டல் தொழில் அதிபரிடம் ரூ.50 லட்சம் பறிப்பு - 2 பேர் கைது

நடிகைகளுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி தொழில் அதிபரிடம் ரூ.50 லட்சம் பணம் பறித்த பைனான்சியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நடிகைகளுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டல் தொழில் அதிபரிடம் ரூ.50 லட்சம் பறிப்பு - 2 பேர் கைது
Published on

சென்னை,

சென்னை பாண்டிபஜார் ராமன் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 42). தொழில் அதிபரான இவருக்கும், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பைனான்சியர்கள் ரமேஷ், கார்த்திக் ஆகியோருக்கும் இடையே கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகமாகி உள்ளது.

3 பேரும் நெருங்கிய நண்பர்கள் போல் பழகி வந்தனர். இந்த நிலையில் ரமேஷ் கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி தனது பிறந்தநாளை சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் ராஜாவும் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் ரமேசின் பெண் தோழிகள், துணை நடிகைகளும் கலந்துகொண்டு உள்ளனர். மது விருந்தும் நடந்துள்ளது. அப்போது துணை நடிகைகளுடன் ராஜா நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவருக்கு தெரியாமல் ரமேசும், கார்த்திக்கும் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 4-ந்தேதி அன்று அவர்கள் 2 பேரும் சேர்ந்து ராஜாவை செல்போனில் தொடர்பு கொண்டு, உன்னுடைய ரகசிய வீடியோக்கள் எங்களிடம் உள்ளது. அதை வெளியே விடாமல் இருக்க ரூ.2 கோடி பணம் தர வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த வீடியோ வெளியானால் அவமானமாகி விடும் என்று கருதிய ராஜா ரூ.50 லட்சம் பணம் தருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 16-ந்தேதி அன்று ரூ.50 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

எனினும் ராஜாவிடம் மேலும் பணம் பறிக்க ரமேசும், கார்த்திக்கும் திட்டமிட்டனர். கடந்த மாதம் முதல் வாரத்தில் அவர்கள் 2 பேரும் சேர்ந்து ராஜாவுக்கு மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால் இந்த முறை அவர்கள் கேட்ட பணத்தை ராஜா கொடுக்கவில்லை.

போலீசில் புகார்

இந்த மிரட்டல் குறித்து பாண்டிபஜார் போலீஸ்நிலையத்தில் கடந்த 23-ந்தேதி அன்று கண்ணீர்மல்க புகார் மனு அளித்தார். அந்த மனுவில், நண்பர்களாக பழகி வந்த ரமேசும், கார்த்திக்கும் பெண்களுடன் நெருக்கமாக இருக்க வற்புறுத்தினர். அதன்பின்னர், என்னுடைய ரகசிய வீடியோக்கள் இருப்பதாக மிரட்டுகின்றனர்.

சமுதாயம் மற்றும் குடும்பத்தில் என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்று எண்ணி ரூ.50 லட்சம் பணத்தை கொடுத்தேன். இந்த பணத்தை ரமேஷ் அனுப்பிய மோகன் என்பவர் என்னுடைய வீட்டுக்கு வந்து பெற்றுக்கொண்டார். தொடர்ந்து என்னை பணம் கேட்டு மிரட்டுகின்றனர். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, என்னை மிரட்டி பறித்த ரூ.50 லட்சம் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

மோகன் என்பவர் ரூ.50 லட்சம் பணம் வாங்கி சென்றதை ராஜா வீடியோவாக பதிவு செய்து, அதனை புகார் மனுவுடன் சமர்ப்பித்திருந்தார்.

விசாரணை

இந்த புகார் மனு மீது பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ராஜா மூலமாகவே இந்த வழக்கில் பைனான்சியர்கள் ரமேஷ், கார்த்திக் ஆகிய 2 பேரையும் போலீசார் பொறி வைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களுடைய செல்போன்களை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் துணை நடிகைகளுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com