

ராமநாதபுரம்,
பரமக்குடி அருகே பிடாரிசேரி பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த 50 செம்மறி ஆடுகள் மீது லாரி மோதியதில், அவை அனைத்தும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லூரணியைச் சேர்ந்த கேசவனுக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை, அவரது சொந்த கிராமத்துக்கு அழைத்துச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
பார்த்திபனூரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு கருவேல மரத்தூள் ஏற்றிச் சென்ற லாரி, ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்றுகொண்டிருந்த ஆடுகள் மீது மோதியதாக தெரிகிறது. இதில் 50 செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
விபத்தில் உயிரிழந்த செம்மறி ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடுகளின் உரிமையாளர் கேசவன் பெரும் இழப்பை சந்தித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் அர்ஜுனனை பார்த்திபனூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.