

சென்னை,
சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட சிவப்பு நிற காதுகள் கொண்ட அரிய வகை ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்த ஆமைகளை பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முகமது முபின் என்பவர் கடத்தி வந்துள்ளார்.
சிவப்பு நிற காதுகள் கொண்ட ஆமைகள் மற்றும் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த அரிய வகை ஆமைகள் உள்பட மொத்தம் 500 ஆமைகளை அதிகாரிகள் உயிருடன் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மதுரையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் ரவிக்குமாருக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருப்பதாக முகமது முபின் வாக்குமூலம் அளித்த நிலையில், ரவிக்குமாரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.