சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் 512 செவிலியர் பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு அரசால் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் 512 செவிலியர் பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு: 512 செவிலியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தற்காலிக செவிலியர் பணியிடங்கள்

பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை மாநகர நலச் சங்கம் மூலமாக சென்னையில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 512 தற்காலிக செவிலியர் பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு அரசால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதலின்படி தற்காலிக செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு 50 வயதிற்கும் மிகாமல் கீழ்காணும் கல்வித் தகுதியுள்ள செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவங்கள்

செவிலியர் பட்டயப் படிப்பு (GNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) – அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் செவிலியர் கல்லூரி (இந்திய செவிலியர் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டது). தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவு கட்டாயம். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளம் (www.chennaicorporation.gov.in) மற்றும் தேசிய நலக் குழுமம் / தமிழ்நாடு இணையதளம் (https://nhm.tn.gov.in/) ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முறையான படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சுய கையொப்பமிட்ட சான்று ஆவணங்களுடன் மாநகர நல அலுவலர் / உறுப்பினர் செயலர், சென்னை மாநகர நலச் சங்கம், பொது சுகாதாரத்துறை, ரிப்பன் கட்டடம், 3ஆம் தளம், அம்மா மாளிகை, EVR பெரியார் சாலை, சென்னை-600 003 என்ற முகவரிக்கு 25.09.2026 மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரிலோ / தபாலிலோ அளிக்கலாம். இது குறித்து கூடுதல் விளக்கங்கள் / விவரங்கள் தேவைப்படின் 044 – 2561 9330, 94451 90744, 94459 10934, என்ற எண்களுக்கு அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். இந்தப் பணிக்குத் தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com