

சென்னை,
விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ்; 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியை துப்பாக்கியால் இலக்கை குறிவைத்து சுட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.
துப்பாக்கி சுடுதல் விளையாட்டிற்கு தேவையான கட்டமைப்புகள் குறித்து கேட்டறிந்ததோடு, தானும் இந்த விளையாட்டை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பில் 51-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியை விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சென்னை காவல் ஆணையாளர் அமல்ராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியின் போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் காவல்துறை ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் துப்பாக்கி சுடுதல் வீரர்களை ஊக்குவித்தனர். துப்பாக்கி சுடுதல் விளையாட்டின் அடிப்படை நடைமுறைகள் குறித்து பயிற்சியாளர்களிடம் கேட்டறிந்து வீரர்-வீராங்கனைகளுடன் கலந்துரையாடியும் வாழ்த்து தெரிவித்தனர்.
போட்டிகள் பொதுவாக 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் ரேஞ்ச்களில் நடத்தப்படுகின்றன. 10 மீட்டர் ஏர் ரைபிள்,(Air Rifle) 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (Air Pistol), 25 மீட்டர் ஸ்போர்ட் பிஸ்டல், 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் (மண்டியிட்டு, படுத்து, நின்று சுடுதல்) ஷாட்கன். போட்டிகள் ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு பிரிவுகளில் நடைபெறுகின்றன. சர்வதேச அளவில் போட்டிகள் International Shooting Sport Federation விதிமுறைகளின்படி நடத்தப்படுகின்றன. வீரர்கள் சிறப்பு பாதுகாப்பு உபகரணங்களுடன், கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி பங்கேற்பார்கள். இதில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள், தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்கள், துப்பாக்கி சுடும் வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.