ராமேசுவரம், ஜெகதாப்பட்டினம், நாகை, காரைக்காலை சேர்ந்த 54 மீனவர்கள் நடுக்கடலில் சிறைப்பிடிப்பு

ஒரே நாளில் ராமேசுவரம் உள்பட மீனவர்கள் 54 பேரை 5 படகுகளுடன் இலங்கை கடற்படை நடுக்கடலில் சிறைப்பிடித்து கொண்டு சென்றது.
ராமேசுவரம், ஜெகதாப்பட்டினம், நாகை, காரைக்காலை சேர்ந்த 54 மீனவர்கள் நடுக்கடலில் சிறைப்பிடிப்பு
Published on

ராமேசுவரம்,

இலங்கை கடற்படையால் நடுக்கடலில் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. மேலும் இலங்கை கடற்படையால் மீனவர்கள் நடுக்கடலில் தாக்கப்படுவதும், விரட்டப்படுவதும், அவர்கள் வலைகள், மீன்பிடி உபகரணங்கள், படகுகள் சேதப்படுத்தப்படும் சம்பவங்களும் தொடர்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்களை படகுடன் கடலில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

54 மீனவர்கள்

இந்த நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவமாக இலங்கை கடற்படையால் நேற்று ஒரே நாளில் 54 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 14 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் தமிழக மீனவர்கள் ஆவர்.

கடந்த 5 ஆண்டுகளில் நடந்த சிறைப்பிடிப்பு சம்பவங்களில் ஒரே நேரத்தில்50-க்கும் மேற்பட்ட மீனவர்களை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது இதுவே முதல்முறை என மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். இதுபற்றிய விவரம் வருமாறு:-

கல் வீசி தாக்குதல்

ராமேசுவரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர். அவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள கடல்பகுதியில் மீன் பிடித்தபோது 5-க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன் பிடிக்கவிடாமல் கல் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

ராமேசுவரத்தை சேர்ந்த மரியசிங்கம், சுப்பிரமணியன் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் மரியசிங்கம், ராபின்சன், பேசியர், பிராங்கிளின், சுபி, சோதனை முத்து, சக்தி, விஜயன், ரோசஸ்டெரன்ஸ், கதிர், ஜான், மகேசுவரன், சிவா, பளூடாஸ், ஆவிரோ, ராயப்பு, குமார் உள்ளிட்ட 20 மீனவர்கள் இருந்தனர். இவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். சிறைப்பிடிக்கப்பட்ட அவர்களது 2 படகு, 20 மீனவர்களையும் இலங்கையில் மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் 34 மீனவர்கள்

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும், நாகப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 2 படகுகள் மற்றும் 20 மீனவர்களையும், காரைக்கால் பகுதியில் இருந்து ஒரு படகில் மீன்பிடிக்க சென்ற 14 மீனவர்களையும் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்ததாக கூறி சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களை யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை கடற்படை முகாம்களுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

ஒரே நாளில் 54 மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐ.நா. சபையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காத நிலையில் இந்த சிறைபிடிப்பு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மீது கோபம்

ராமேசுவரம், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற 5 படகுகள் மற்றும் 54 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளது பற்றி பாம்பனில் உள்ள நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் கூறியதாவது:-

ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு இந்தியாதான் காரணம் என இலங்கை அரசு நினைத்து வருகிறது.

இந்த பிரச்சினை குறித்து இலங்கை அரசு ஐ.நா. மன்றத்தில் வாதாடாமல் அந்த கோபத்தையும், தனது சுயரூபத்தையும் மீன்பிடிக்க செல்லும் அப்பாவி தமிழக மீனவர்கள் மீது காட்டி வருகிறது.

ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை ஒரே நாளில் 50-க்கும் அதிகமான மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது இல்லை.

மத்திய அரசு இலங்கை அரசுடன் உடனடியாக பேசி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 54 பேரையும், படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் சார்பாக மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com