

சென்னை,
பயணிகளின் தேவை மற்றும் வசதியை மேம்படுத்தும் நோக்கில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் முதல் கட்டம் மற்றும் அதன் விரிவாக்க வழித்தடத்தில் உள்ள 27 மெட்ரோ ரெயில் நிலையங்களில், பயணிகளின் எண்ணிக்கை மற்றும் தேவையை கருத்தில் கொண்டு, புதிதாக 55 நகரும் படிக்கட்டுகள் நிறுவப்பட்டுள்ளன.
குறிப்பாக, திருமங்கலம், அண்ணா நகர் கிழக்கு மெட்ரோ ரெயில் நிலையங்களில் தலா 5 நகரும் படிக்கட்டுகளும், வடபழனியில் 4, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் டவர் மற்றும் அரசினர் தோட்டம் ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் தலா 3, தேனாம்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், கிண்டி, தியாகராஜா கல்லூரி, விம்கோநகர் பணிமனை, சென்ட்ரல், வண்ணாரப்பேட்டை, எல்.ஐ.சி., நேரு பூங்கா, விமான நிலையம், அசோக் நகர், எழும்பூர், நந்தனம் ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் தலா 2 நகரும் படிக்கட்டுகளும், பரங்கிமலை, சின்னமலை, ஐகோர்ட்டு, மண்ணடி, தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் தலா 1 நகரும் படிக்கட்டுகளும் கூடுதலாக நிறுவப்பட்டுள்ளன.
ஏற்கனவே இருந்த 226 நகரும் படிக்கட்டுகளுடன், புதிதாக நிறுவப்பட்டுள்ள 55 நகரும் படிக்கட்டுகளும் சேர்த்து நகரும் படிக்கட்டுகளின் எண்ணிக்கை தற்போது 281 ஆக உயர்ந்துள்ளது. இந்த கூடுதல் வசதியை பயணிகள் திறந்து வைத்தனர். நிகழ்வில், மெட்ரோ ரெயில் இயக்குநர் மனோஜ் கோயல், தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்யா, பொது மேலாளர் எஸ். சதீஷ் பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.